வெள்ளி, 21 மார்ச், 2014

5 முனை போட்டியால் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 24-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

5 முனை போட்டி
தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. தி.மு.க. கூட்டணி, பா.ஜனதா கூட்டணி, இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தும் போட்டியிடுவதால் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
அனைத்துக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களும் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டியது உள்ளது. இதற்கிடையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டனர்.
ஜெயலலிதா பிரசாரம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா கடந்த 3-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று விருதுநகர் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
மத்திய அரசுக்கு எதிராக கடும் தாக்குதல் தொடுத்துவரும் அவர், மாநில அரசின் சாதனைகளையும் பிரசார கூட்டங்களில் பட்டியலிட்டு வருகிறார். மத்தியில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் வலுவான அரசு அமைய ஆதரவு அளிக்கும்படி தமிழக மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வேனில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நாகப்பட்டினம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5-ந்தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சென்று திறந்த வேனில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைவதற்கு முன்பே தனது பிரசாரத்தை தொடங்கி விட்ட விஜயகாந்த், நேற்று நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ம.க. தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாளை மதுரையில் பிரசாரம் தொடங்குகிறார்.
நரேந்திரமோடி
தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் பிரசார பேரணிகளில் பங்கேற்றுவரும் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு 2 முறை வந்து திருச்சி மற்றும் சென்னை வண்டலூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பேசினார்.
தற்போது பா.ஜனதா தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், நரேந்திரமோடி மீண்டும் தமிழகத்திற்கு வந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேரணியில் பங்கேற்க இருக்கிறார்.
வருகிற திங்கட்கிழமை அன்று பொதுச்செயலாளர் முரளிதரராவ் தலைமையில் நடைபெற இருக்கும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் நரேந்திரமோடி தமிழகம் வரும் தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
மன்மோகன்சிங்- சோனியா
தமிழ்நாட்டில் தனித்து களம் காணும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் பிரசாரம் செய்யும் தேதி குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று, தமிழக தலைவர் ஞானதேசிகன் நேற்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அகில இந்திய தலைவர்களும் தமிழகத்திற்கு படையெடுக்க இருப்பதை அடுத்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக